இரண்டாம் திருமணம் செய்த மகளின் கணவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரமேஷ் - சித்ரா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா. இவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். அங்கு திடீரென சித்ரா, தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சித்ராவை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதையடுத்து, போலீஸாரிடம் சித்ராவின் மகள் ஐஸ்வர்யா தெரிவித்தது: ஊத்தங்கரை வட்டம், சாமல்பட்டியை அடுத்த நாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் - சந்திரா தம்பதியின் இளைய மகன் கோவிந்தனுக்கும் எனக்கும் கடந்த 2017 - ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இத்தகைய நிலையில் 10 நாள்களுக்கு பிறகு என்னை எனது தாய் வீட்டில் விட்டுச் சென்றவர்கள் மீண்டும் அழைத்துச் செல்லவில்லை.
இத்தகைய நிலையில், எனது கணவர் கோவிந்தனுக்கும், அவரது அக்காள் மகளுக்கும் திருமணம் நடைபெற்றதாக தெரியவந்தது. இதுகுறித்து, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த எனது தாய், சித்ரா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். எனவே, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவர் கோவிந்தன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.