கிருஷ்ணகிரியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் கண்ணன். இவரது முகாம் அலுவலகம், வீடு கிருஷ்ணகிரி காந்தி சிலை அருகில் உள்ளது. மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை, மது விற்பனை, சூதாட்டம் நடத்துவோரிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு, சட்ட விரோதச் செயல்களை காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன் அனுமதித்து வருவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு அதிகளவில் புகார்கள் சென்றுள்ளன.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் ஒரு குழுவினர், கிருஷ்ணகிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், வீட்டில் திங்கள்கிழமை இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு 7 மணிக்கு தொடங்கிய சோதனை 12 மணிக்கு மேலும் தொடர்ந்து நடைபெற்றது. இந்தச் சோதனையில் ரூ.4.35 லட்சம் கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள், ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் குறித்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணனிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த கண்ணன், கோவை நகர உதவி ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.