பர்கூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பர்கூர், ஜிஞ்சம்பட்டி பகுதிகளில் ரூ.4.03 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம், கடந்த 2015-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகம், பர்கூரில் அரசு பயணியர் மாளிகையில் செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தனிக் கட்டடம் கட்ட ரூ.2.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பர்கூர் சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், அரசு அலுவலர் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கான பணியை சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
அதேபோல், குட்டூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஜிஞ்சம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.1.36 கோடி மதிப்பிலான கூடுதல் வகுப்புறைக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளையும் அவர் தொடக்கி வைத்தார்.
அப்போது, அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயபால், முன்னாள் எம்.பி. சி.பெருமாள், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் மாதையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.