ஒசூர் அருகே, விவசாயப் பயிர்க் கடன் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கோனேரிப்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த அட்டகுறுக்கி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (45). இவர் ரூ.95 ஆயிரம் விவசாயப் பயிர்க் கடன் பெற, கோனேரிப்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்தார். கடந்த டிசம்பர் மாதத்தில் ரூ.85 ஆயிரம் கடன் வழங்கப்பட்ட நிலையில் ரூ. 10 ஆயிரத்துக்கான உரம் வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். இதுகுறித்து, கூட்டுறவு கடன் சங்கச் செயலாளரான, குருபரப்பள்ளியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (47), என்பவரிடம் ஜெய்சங்கர் கேட்டுள்ளார். அதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெய்சங்கர், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து பத்து 500 ரூபாய் நோட்டுகளை, ஜெய்சங்கரிடம் போலீஸார் கொடுத்து அனுப்பினர். அதை, கூட்டுறவுச் சங்கத்தில் இருந்த ராமச்சந்திரனிடம் திங்கள்கிழமை ஜெய்சங்கர் வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த ஆய்வாளர் முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், ராமச்சந்திரனை பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.