ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்க்கக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் கே.செல்வராசு தலைமை வகித்தார். வி.வேலு, எ.கணேசன், வி.சுப்பிரமணி, மொளுகு, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.கோவிந்தசாமி வாழ்த்தி பேசினார்.
இதில் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.