ஒசூர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் இருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே பாகலூரைச் சேர்ந்த விக்கி (19), மணிகண்டன் (19) ஆகியோர் அப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை இருவரும், இருசக்கர வாகனத்தில் ஒசூரில் இருந்து பாகலூர் நோக்கிச் சென்றனர். பாகலூர் அருகே தின்னப்பள்ளி என்ற இடத்தின் அருகே சென்றபோது, எதிரில் வந்த லாரி அவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். விக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த மணிகண்டனை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து பாகலூர் போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து பாகலூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.