கிருஷ்ணகிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் கண்ணன். இவரது முகாம் அலுவலகம் மற்றும் வீட்டில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் அதன் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் திங்கள்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர். 7 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை நள்ளிரவு 1 மணிக்கு நிறைவு பெற்றது.
இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சோதனையில் கணக்கில் வராத ரூ.1,34,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகைகள் ஏதும் கிடைக்கவில்லை. மேலும், துறை வாரியான நடவடிக்கை குறித்து ஏதும் தெரிவிக்க இயலாது என்றார்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை, கிருஷ்ணகிரி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, துணைக் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டு நீதிமன்றத்திலிருந்து கடிதம் அனுப்பப்படும். அதற்கு அவர் அளிக்கும் விளக்கத்தை அடுத்தே, அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.