கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கிருஷ்ணகிரி, ஒசூரைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆள்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்த இருபாலரும் பங்கேற்கலாம். பி.காம். படித்தவர்களுக்கு 2 ஆண்டு அனுபவமும், ஐடிஐ படித்தவர்களுக்கு 5 ஆண்டு அனுபவமும் தேவை. 18 முதல் 35 வயதுக்குள்பட்டவர்கள் பங்கேற்க தகுதியானவர்கள். இந்த தகுதிகளுடைய பணிநாடுநர்கள், தங்களுடைய சுய விவரம், கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம் எனவும், இந்த முகாம் மூலம் பணி கிடைத்தால் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.