கிருஷ்ணகிரி

எருது விடும் விழா: விலங்குகள் நல வாரிய ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டாடப்படும் எருது விடும் விழா குறித்து, இந்திய விலங்குகள் நல வாரிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமை வகித்தார்.
இதில் இந்திய விலங்கின நல வாரிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.மிட்டல் பேசியது: உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே எருது விடும் விழாக்களை நடத்த வேண்டும். இந்த விழாக்களில் பங்கேற்கும் எருதுகளை மருத்துவப் பரிசோதனை செய்யும் இடம், எருது ஓடும் இடம், எருதுகள் சேகரிக்கும் இடம் ஆகிய பகுதிகளில் தடுப்பரண்களை அமைக்க வேண்டும். 
எருது விடும் விழாவுக்கு அழைத்து வரப்படும் எருதுகள், சம்பந்தப்பட்ட கிராமத்தின் கால்நடை மருத்துவரிடம் உடல் தகுதிச் சான்று கட்டாயம் பெற்று வர வேண்டும். எருதுகள் ஓடும் பகுதியில் மனிதர்களின் நடமாட்டம் இல்லாமல் காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும். 
மேலும், காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, ஆயத்தீர்வைத் துறை ஆகிய அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து, உச்சநீதிமன்ற நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.  
முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டம், கண்ணன்டஅள்ளியில் நடைபெற்ற எருது விடும் விழாவையும், மகாதேவகொல்லஅள்ளியில் பிப். 22-ஆம் தேதி நடைபெறும் எருது விழாவுக்கான முன்னேற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது, ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழு உறுப்பினர் அயூப்கான், வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணன், விமல்ராஜ், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் மனோகரன் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT