ஒசூர் அருகே யானை தாக்கியதில் கல்லூரி மாணவர் காயமடைந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனத் துறையினரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கர்நாடகத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் சானமாவு, போடூர்ப்பள்ளம், ஊடேதுர்க்கம், அஞ்செட்டி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை வனப் பகுதிகளில் முகாமிட்டு அப் பகுதியிலுள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
பொதுமக்கள், வனத் துறையினர் பலமுறை யானைகளை விரட்ட முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சானமாவு வனப் பகுதியிலிருந்து சுற்றித்திரிந்த ஒற்றை யானை பீர்ஜேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் லேகேஷ்(18) என்பவரைத் தாக்கியது. இதில் காயமடைந்த மாணவர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், யானைகளை மீண்டும் கர்நாடக வனப் பகுதிக்கு விரட்டியடிக்க வனத் துறையினர் தீவிர முயற்சி மேற்கொள்ளாததே இந்த சம்பவத்துக்கு காரணம் எனக் கூறி, ஒசூர்-தருமபுரி சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினர் மற்றும் ஒசூர், உத்தனப்பள்ளி போலீஸார் சமரசம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.