ஒசூர் அருகே கிராம மக்களை அச்சுறுத்தி, விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஒசூர் அருகே போடூர்பள்ளம் மற்றும் சானமாவு வனப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் அடைந்து அருகே உள்ள சானமாவு, தொரப்பள்ளி, ஒன்னல்வாடி, பீர்ஜேப்பள்ளி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் புகுந்து மக்களை அச்சுறுத்தியும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் வருகின்றன.
இந்த யானைகளை விரட்ட கிராம மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் திங்கள்கிழமை 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானைகளை பட்டாசுகளை வெடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சானமாவு அருகே யானைகள் சாலையைக் கடந்து செல்ல வசதியாக ஒசூர் - ராயக்கோட்டை சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தினர். இதையடுத்து யானைகள் சாலையைக் கடந்து சென்றதை தொடர்ந்து வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் சுமார் ஒரு மணி நேரம் ஒசூர் - தருமபுரி சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து யானை கூட்டங்களை சானமாவு சினிகிரிப் பள்ளி கிராமத்தின் வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்துக்கு யானைகளை விரட்டவும் வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.