கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் புள்ளிமான் உயிரிழந்தது.
கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் அருகே கிருஷ்ணகிரி - பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகில் மூன்று வயதான பெண் புள்ளிமான், சாலையில் உயிரிழந்து கிடப்பது குறித்து தகவல் அறிந்த வனத் துறையினர் விரைந்து வந்து, உயிரிழந்த புள்ளிமானை கைப்பற்றி, கிருஷ்ணகிரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து புள்ளி மானை வனச்சரக அலுவலக வளாகத்திலேயே புதைத்தனர். வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புள்ளிமான், தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு, பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளி கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் வாகனம் மோதியதில் உயிரிழந்தது. இந்த நிலையில், மேலும் ஒரு புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதனால், வன விலங்குகள் வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க வனத் துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.