கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் வகையில், சுயேச்சை வேட்பாளர் தனது வேட்பு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு எப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இத்தகைய நிலையில், கடந்த இரு நாளாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகரிடம், சுயேட்சை வேட்பாளர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த டி.வி.எஸ்.காந்தி (45) வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிட ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மார்ச் 22-ஆம் தேதி அதிமுக வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.