ஊத்தங்கரையை அடுத்த செங்கன் கொட்டாவூர் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு திடீரென கூரை வீடு தீப்பற்றியதில், தாய் மற்றும் ஒரு வயது குழந்தை உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஊத்தங்கரையை அடுத்த ஊமையனூர் கிராமத்தைச் சேர்ந்த சோலைராஜன் (32), குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை பங்குனி உத்திர திருவிழாவுக்காக தனது மனைவி தீபா (29), மகள் நித்யஸ்ரீ (1) இருவரையும் செங்கன் கொட்டாவூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் மாமனாரின் கூரை வீட்டில் வியாழக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியதில், தீபா மற்றும் நித்யஸ்ரீ தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கணவன், மனைவி இருவருக்கும் ஏற்கெனவே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.