ஒசூர் அருகே கல்குவாரியில் உள்ள குட்டையில் மூழ்கி சிறுமி, 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
அஸ்ஸாம் மாநிலம், கும்மி பகுதியை சேர்ந்தவர் மோனா. இவர் ஒசூரை அடுத்த மத்திகிரி அருகே உள்ள அச்செட்டிப்பள்ளி பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் சனிக்கிழமை அச்செட்டிப்பள்ளி அருகே உள்ள கல்குவாரி குட்டைக்கு மீன் பிடிக்க சென்றார்.
இவருடன் அவரது மகன் பாபு (12), அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜி மகன் அஜய் (13), மகள் லட்சுமி (7) ஆகியோரும் சென்றனர். மீன் பிடித்து கொண்டிருந்த போது மோனா இயற்கை உபாதை கழிக்க குட்டையில் இருந்து சிறிது தொலைவுக்கு சென்றார். அப்போது குட்டையில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் பாபு, அஜய் மற்றும் சிறுமி லட்சுமி ஆகியோர் குட்டையில் விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் குட்டைக்கு வந்த மோனா, குழந்தைகள் 3 பேரும் குட்டையில் விழுந்ததை கண்டு கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். உடனடியாக பொதுமக்கள் குட்டையில் குதித்து 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்திகிரி போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.