நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவிகள் கிராமிய வேளாண்மை பயிற்சி முகாமின் கீழ் மோகனூரில் உள்ள ஹீல்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் செவிந்திபட்டி கிராமத்தில் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு அண்மையில் செயல் விளக்கம் அளித்தனர்.
அங்கு மாணவிகள் அசோலாவின் வளர்ப்பு குறித்து படிப்படியாக எடுத்துரைத்தனர். அசோலாவை மாட்டுத் தீவனமாகவும் நெல் பயிருக்கு இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம். இதில் தழைச்சத்து அதிகம் உள்ளதால் நெல் பயிரின் வளர்ச்சிக்குஉதவும்.
அசோலாவை வளர்ப்பதற்கு 10 அடி நீளம், ஒரு அடி ஆழமுள்ள குழிதோண்டி அதன் மேல் தார்ப்பாய் விரிக்க வேண்டும். அந்தக் குழியினுள் தண்ணீரை ஊற்ற வேண்டும்.
அதன்பின் சலித்த மணலை அதில் சேர்க்க வேண்டும்.
மாட்டுச் சாண கரைசலை அதில் ஊற்ற வேண்டும். பிறகு அதில் அசோலாவைத் தூவி விட வேண்டும். 10 நாள்களுக்கு ஒருமுறை அதிலுள்ள சாணக் கரைசலை மாற்ற வேண்டும். இரண்டு வாரத்தில் அசோலாவை அறுவடை செய்யலாம் என மாணவிகள் தெரிவித்தனர்.