அரசுப் பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தை மாற்றி கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரம் ஊனந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட சின்ன வரகூர் கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லை. நான்கு வகுப்பறையில் ஒரு ஓட்டு கட்டடம் பழுதடைந்துள்ளது. 8ஆம் வகுப்பு திண்ணையில் தான் நடைபெறுகிறது. மழைக் காலத்தில் ஓட்டு கட்டடத்தில் உள்ளே அமர்ந்து படிக்க சிரமமாக உள்ளது. மேலும் ஓட்டு கட்டடம் பலவீனமாக உள்ளது.
இப் பள்ளியானது மலைப் பகுதியில் உள்ளதால், மாணவர்கள் சின்னவரகூர் கோம்பை, கொளக்கமேடு, கீரைக்காடு, குட்டகாடு, பெரிய வரகூர் கோம்பை, புதுவலவு, சின்ன செக்கடி, பச்சாக்கவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து மலை மீது இருந்தும் 3 கி.மீ தூரம் வரை தினமும் நடந்து வந்து படிக்கின்றனர். மழைக் காலத்தில் மழை நீர் அப்படியே உள்ளே விழுகிறது. இதனால் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எங்கள் பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லை. எங்கள் பகுதி குழந்தைகள் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து கற்றிட எங்கள் ஊர்ப் பள்ளிக்கு 4 கூடுதல் வகுப்பறைக் கட்டடமும், குடிநீர்த் தொட்டியும் கட்டித் தர வேண்டும்.