விசைத்தறித் துறை மேம்பாட்டுக்கான இந்திய அரசின் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் குமாரபாளையத்தை அடுத்த லட்சுமி நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மத்திய அரசு விசைத்தறித் துறையின் மேம்பாட்டுக்கு பவர் டெக்ஸ் இந்தியா எனும் பெயரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து விசைத்தறியாளர்களுக்கு விளக்கும் வகையில் கருத்தரங்கை கோவை மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம், குமாரபாளையம் சித்ரா விசைத்தறி சேவை மையமும் இணைந்து கருத்தரங்கை நடத்துகின்றன.
இந்தக் கருத்தரங்குக்கு கோவை மண்டல ஜவுளி ஆணையர் அலுவலக இணை இயக்குநர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகிக்கிறார். குமாரபாளையம் கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கே.ஜி.பழனிச்சாமி முன்னிலை வகிக்கிறார். ஜவுளி ஆணையர் அலுவலக தொழில்நுட்ப அலுவலர் சுந்தரேஸ்வரன் வரவேற்கிறார்.
மத்திய அரசின் விசைத்தறி வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோவை மண்டல ஜவுளி ஆணையர் அலுவலக உதவி இயக்குநர் எம்.ஆர்.சுதாராணி, வங்கிக் கடன் உதவிகள் குறித்து குமாரபாளையம் இந்தியன் வங்கியின் தலைமை மேலாளர் டி.சுமதி, ஜவுளித்துறை வளர்ச்சிக்கான மாநில அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ரங்கசாமி, திருச்செங்கோடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறை உதவி இயக்குநர் ஆர்.விஸ்வநாதன் ஆகியோர் பேசுகின்றனர். விசைத்தறியாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசு விசைத்தறி மேம்பாட்டுக்கு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தகவல்களை பெற்று பயனடைய வேண்டும் என குமாரபாளையம் சித்ரா விசைத்தறி நிலையத்தின் பொறுப்பு அதிகாரி ஜி.பன்னீர்செல்வம் கேட்டுக்
கொண்டுள்ளார்.