ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கற்றல் அடைவுத் திறன் குறித்த கூட்டம் திருச்செங்கோடு வட்டார வள மையத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராமன் தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் சந்திரசேகர், வட்டார கல்வி அலுவலர்கள் மாதவன், உதயகுமார் ஆகியோர் அடைவுத்தேர்வு நடத்தப்பட்ட 50 துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக் கூட்டம் குறித்து விளக்கினர். மாணவர்களுக்கு கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கப்பட்டு வருவதனால், மாணவர்களின் கற்றல் தரம் எவ்வாறு மேம்படுகிறது என ஆலோசிக்கப்பட்டது. மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களில் வாசித்தல், எழுதுதல் திறன், கணித அடிப்படை திறன்கள் போன்றவற்றில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும், மேம்படுத்துதல் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது. திறன்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற பள்ளிகளில் முன்னேற்றம் காண செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.