அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க, வரும் 16-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு,ஆசியாமரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் அமையும் தனிப்பட்ட மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே கடந்த 3-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை விடுமுறையாக இருந்ததால், அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்காக கால நீட்டிப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதன் அடிப்படையில், தமிழக அரசின் உத்தரவின்பேரில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்காக இணையதளம் மூலமாக பதிவு செய்ய வரும் 16-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலத்துக்குள் நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 20.10.2018-க்கு முன் கிரயம் பெற்றுள்ள அனுமதியற்ற மனைகளின் உரிமையாளர்கள் இணையதள முகவரியில் ரு.500 செலுத்தி பதிவு செய்த ரசீதை ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட நகராட்சி, பேருராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பித்து மனையை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், மனையின் கிரையப் பத்திர நகல், நடப்பு வரையிலான வில்லங்கச் சான்று நகல், பட்டா நகல் நில அளவை வரைபட நகல், மனை அமையும் மனைப் பிரிவின் வரைபடம் 5 நகல்கள் மற்றும் அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளின் உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.