மாதந்தோறும் மருத்துவப்படி ரூ. 1,000 வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வுபெற்ற அலுவலர் சங்க நாமக்கல் மாவட்ட கிளை சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன தேசியக்குழு உறுப்பினர் தம்பிராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ரூ. 9,000 வழங்க வேண்டும். மாதம்தோறும் மருத்துவப்படி ரூ. 1,000 வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். ஓய்வூதியர் அனைவருக்கும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அரசுப் பேருந்துகளில் 50 சதவீதம் பயணச்சலுகை வழங்க வேண்டும். ஓய்வூதியர் இறந்துவிட்டால் ஈமச் சடங்குக்காக ரூ. 25,000 வழங்க வேண்டும்.
ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.