பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்க் கிராம ஊழியர் சங்கம் சார்பில், வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ளிருப்பு தர்னா வியாழக்கிழமை நடைபெற்றது.
வருவாய்க் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நாள்களைக் கணக்கிட்டு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஜமாபந்திபடி, இயற்கை இடர்பாடு பணிக்கு சிறப்புபடி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வை 30 சதவீதமாக உயர்த்தியும், 10 ஆண்டுகள் பணி என்பதை 6 ஆண்டுகளாகக் குறைத்தும் நிர்ணயிக்க வேண்டும். கடைசி மாதம் பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் ஆகிய 7-அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் எ. சுப்ரமணி தலைமை வகித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவர் பரமசிவம், வட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதுபோல் மோகனூர், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், ராசிபுரம், கொல்லிமலை, திருச்செங்கோடு, குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.