ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூர் அழியா இலங்கையம்மன் கோயிலின் ஆண்டு திருவிழாவையொட்டி, பொங்கல் விழா வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
இந்தத் திருவிழா பூச்சாட்டுதலுடன் நவம்பர் 12-ல் தொடங்கியது. இதையொட்டி, கூனவேலம்பட்டிபுதூர் கிராமத்தில் அரிசி சோறு சமையல், குழம்புக்கு தாளிப்பு, எண்ணெய் பலகாரம் போன்றவற்றை 3 நாள்களுக்கு யாரும் சமைக்க மாட்டார்கள் என்பது காலம் காலமாக
கடைபிடிக்கப்பட்டுவரும் நடைமுறையாகும்.
வழக்கமான அரிசி உணவுக்குப் பதிலாக கோதுமை, ரவை, தினை மாவு, ஆரியம், கம்பு போன்றவற்றாலான உணவு முறைகளையே கிராம மக்கள் சமைத்து உண்டனர். இதன்பின்னர், திருவிழாவையொட்டி வியாழக்கிழமை அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாலை பொங்கல் வைத்து, கிராம மக்கள் வழிபட்டனர். திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதால், வருவாய்த் துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.