நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரில் வீட்டின் கதவு, பீரோவை உடைத்து ரூ.50 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (57). இவர் பல ஆண்டுகளாக ராசிபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மனைவி தமிழ்செல்வி, மகன்கள் ஸ்ரீநவீன், மொளரீஸ் ஆகியோருடன் புதுப்பாளையம் பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று தங்கினார். இந்நிலையில், திங்கள்கிழமை இவரது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்ததையடுத்து, இவர் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டும், வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டதும் தெரியவந்ததாம். தகவலின் பேரில் ராசிபுரம் காவல் ஆய்வாளர் சி.செல்லமுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.