உர விற்பனை விலையைவிட கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், நடப்பு சம்பா பருவத்தில் 5,100 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்துக்குத் தேவையான உரங்கள், தனியார் உரக்கடைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
உர மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. மேலும், மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள உயர்ந்தபட்ச விலையை திருத்தம் செய்யக்கூடாது. விவசாயிகளுக்கு, விற்பனை முனையம் மூலம் ஆதார் எண்ணைப் பதிவு செய்து உரங்களை விநியோகம் செய்ய வேண்டும்.
உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட விலையைவிட கூடுதலாகவோ, திருத்தம் செய்யப்பட்டு இருந்தாலோ 04286-280465 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உரக் கட்டுப்பாடு சட்ட விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.