காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் மழை தொடர வாய்ப்புள்ளதால், கோழிப்பண்ணயாளர்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு திசையில் கடலூருக்கும் சென்னைக்கும் இடையில் தோன்றி வலுபெற்று வரும் காற்றழுத்த தாழ்வு நிலை புதன்கிழமை மாலைக்குள் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் திசையில் நாமக்கல் உள்ளதால், புதன்கிழமைக்குப் பிறகு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைப் பொழிவு இருக்கும்.
காற்றின் வேகம் கூடுதலாக இருக்கும் என்பதால், கோழிப் பண்ணையாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவனம் மற்றும் கோழிகள் நனையாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் பக்கவாட்டில் படுதாவை கட்டுவது சிறந்தது. தீவனம் நனையாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.