பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் ஜெ.ஜெ. நகரில், வீட்டின் சுற்றுச் சுவருக்குள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொத்தனூர் ஜெ.ஜெ. நகரில் லட்சுமணன் வீட்டின் சுற்றுச் சுவருக்குள் உள்ள மின் கம்பம் முழுவதும் சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து வீட்டின் மேற்கூரையில் விழுகின்றன.
இந்த மின்கம்பத்தை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால், இந்த மின்கம்பம் விழுந்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த மின்கம்பத்தை அகற்ற கோரி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலமுறை மின் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.
எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.