நாமக்கல்லில் மானிய விலையில் ஆட்டோ வாங்க, வங்கிக் கடனுதவிக்கு பரிந்துரை செய்ய ரூ.3,200 லஞ்சம் பெற்ற தாட்கோ மேலாளர், உதவியாக இருந்த இடைத்தரகர் ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (46). இவர் பயணிகள் ஆட்டோவை மானியக் கடன் உதவியுடன் வாங்க நாமக்கல் மாவட்ட தாட்கோ அலுவலகத்கில் இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் சக்திவேல் (40), கடந்த 12-ஆம் தேதி கணேசனை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தார்.
நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற கணேசனுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்க, வங்கிக்கு பரிந்துரை கடிதம் அனுப்ப வேண்டும் என மேலாளர் சக்திவேல் ரூ.3,200 லஞ்சம் கேட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் செய்தார்.
போலீஸாரின் ஆலோசனைபடி, ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ.3,200 பணத்துடன் நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்த கணேசன், பொட்டணம் பகுதியைச் சேர்ந்த இடைத்தரகர் வரதராஜன் (50) என்பவரிடம் கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட வரதராஜன், தாட்கோ மேலாளர் சக்திவேலிடம் கொடுத்தபோது, அப்பகுதியில் மறைந்திருந்த காவல் ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்தனர்.