ராசிபுரம் நகரில் 12 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ராசிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டுகளையும், நான்கு மண்டலங்களாக பிரித்து எடப்பாடி-ராசிபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகரில் 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 8 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தற்போது 12 நாள்களாகியும் இதுவரை குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். தற்போது பண்டிகை காலம் என்பதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியில் பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்ட நிலையில், இதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாள்களில் இப்பணி முடிவடைந்து குடிநீர் விநியோகம் சீராகும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.