ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையை உழவர் சந்தை அருகே இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராசிபுரம் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் எம். கார்த்திக் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
பேருந்து நிலையத்தின் அருகில் நடைபெறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை இடம் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது. இதனால், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி பேருந்துகள் மிகவும் சிரமப்பட்டு பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கின்றன. மேலும் நாமக்கல், சேலம் செல்லும் பேருந்துகளும், மினி பேருந்துகளும் இந்த வழியாகதான் சென்று வருகின்றன. சந்தை கூடும் நாள்களில் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் செல்லும் பாதை, கடைகளால் அடைக்கப்பட்டு விடுகின்றன.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் சந்தை கூடும் நாள்களில் பேருந்து நிலையத்தின் வெளியில் கூட்டம் அதிமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. இதனால் பேருந்து நிலையம் அருகில் செயல்படும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையை உழவர் சந்தைக்கு பின்புறம் உள்ள காலி இடத்துக்கு மாற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.