ராசிபுரம் பிற்பட்டோர் காலனி பகுதியில் குடியிருப்போர் வீட்டுக்கு பட்டா வழங்கக் கோரி ராசிபுரம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
ராசிபுரம் 8-ஆவது வார்டு பகுதியில் உள்ள பிற்பட்டோர் காலனி பகுதியில் சுமார் 80 பேர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1985-ஆம் ஆண்டு நிபந்தனை பட்டாவுடன் கூடிய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
நிபந்தனை பட்டா விதிமுறையின் படி, இடத்தின் உரிமையாளர் 30 ஆண்டுகளுக்கு இந்த இடத்தை விற்கவோ, பெயர் மாற்றம் செய்யவோ, கடன் பெறவோ முடியாது. இந்நிலையில், தற்போது 30 ஆண்டுகள் கடந்த நிலையில், அப்பகுதியினர் சுமார் 80 பேர் வீடுகளுக்கு பட்டா கேட்டு வந்தனர். ஆனால், பலமுறை பட்டா கேட்டும் வழங்கப்படாததால், சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்களும், அப்பகுதியினரும் வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். பின்னர் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர். இதனையடுத்து, இந்த கோரிக்கையின் மீது பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் உறுதியளித்தனர்.