மாணவர்கள் இலக்கியங்களைப் பாடமாக படிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும் என்றார் எழுத்தாளர் முனிஷ்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில், தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுஜாதா தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற எழுத்தாளர் முனிஷ் பேசியது:
மாணவர்கள் இலக்கியங்களைப் பாடமாகப் படிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக கண்ணோட்டத்தோடு அணுகுதல் வேண்டும். மாணவர்கள் தெரிந்தோதெரியாமலோ செய்யக்கூடிய சிறு தவறுகள் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய பெறும் வாய்ப்பினை இழக்கச் செய்கிறது.
அதனால், வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துதல் வேண்டும். வாழும்போதும் விழும்போதும் நம்மை ஏற்றுக் கொள்ளும் தாய், தந்தையரை மதிக்க வேண்டும். நாம் முன்னேறுவதுடன் நம்முடன் இருப்பவர்களையும் மேம்படுத்துதல் வேண்டும்.
பார்வையற்றவருக்குப் பார்வை கிடைத்தால் எவ்வாறு இந்த உலகத்தை புதிய கண்ணோட்டத்தோடு பார்ப்பார்களோ அதுபோல் இலக்கியங்களையும், சமூகத்தையும் புதிய கண்ணோட்டத்தோடு நோக்குதல் வேண்டும் என்றார்.
துறை தலைவர் ஆனந்தநாயகி, கெளரி, சசிரேகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.