ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அகில இந்திய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அகில இந்திய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சோனி.குணசேகரன் கூறியது: உலகளவில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தொழிலில் இந்தியர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு விதித்த ஜி.எஸ்.டி. வரியினால் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தொழில் மட்டுமல்லாது விவசாயத் தொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஆயிரம் அடிவரை ஆழ்துளைக் கிணறு அமைத்தும் நீர் வராமல் போனால் கிணறு அமைக்கும் விவசாயிகளிடம் எவ்வாறு ஜி.எஸ்.டி. வரியையும் கேட்பது என்று தெரியவில்லை. விவசாயிகளின் நலனைக் காக்கவும், எங்களின் தொழிலை சிரமமின்றி தொடரவும் அரசு உடனடியாக ரிக் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். டீசல் விலை ஏற்றத்தினால் ரிக் தொழில் மிகப் பெரிய அளவில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. டீசல் விலை ஏற்றத்தைக் கொண்டு ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கட்டணத்தை உயர்த்த முடியவில்லை.
பெரும்பாலும் விவசாயிகளே ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதால் எங்கள் தொழிலின் மூலமாக விவசாயிகளுக்கு முடிந்த அளவு விலை குறைத்து கட்டணம் பெற்று வருகிறோம். டீசல் விலை ஏற்றம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றால் தொடர்ந்து விவசாயிகளுக்கு தொழில் முறையாக உதவ முடிவதில்லை. எனவே, ரிக் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு, டீசல் விலை குறைப்பு செய்து விவசாயத்தைக் காக்க மத்திய,மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.