இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ) மற்றும் ஏஐடியுசி சார்பில் அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம், இந்தியாவைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் பிரசார இயக்கம் மேற்கொண்டுள்ள குழுவினருக்கு சனிக்கிழமை இரவு நாமக்கல்லில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்தளித்த பேச்சுரிமை, எழுத்துரிமை, பொது இடங்களில் கூடும் உரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், தீண்டாமை ஒழிப்பு, கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை, ஜாதி, இனம், மதம், பாலினம் சார்ந்த வேறுபாடின்மை ஆகிய அனைத்தும் நசுக்கப்பட்டு வருவதைக் கண்டித்து, பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது.
இதேபோல், இயற்கை வளங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வேளாண்மை, வணிக நிறுவனங்கள், கைத்தறி உள்ளிட்ட சிறு, குறு தொழில்களுக்கு எதிரானவைகளை முன்வைத்தும் பிரசாரம் நடத்தப்படவுள்ளது.
மாநிலம் தழுவிய அளவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம், வேலூர் ஆகிய 6 முனைகளில் தொடங்கிய பிரசாரம், தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூரில் நிறைவுபெறும். அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி பிராசரக் குழுவினர் சனிக்கிழமை பகலில் பெரம்பலூரில் இணைந்து இரவு நாமக்கல் வந்தனர். முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.பழனிசாமி, வை.சிவபுண்ணியம், முன்னாள் எம்பி எம்.செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் இடம்பெற்றிருந்த இந்த குழுவினருக்கு நாமக்கல் பூங்கா சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலர் ஆர்.குழந்தான், நகரச் செயலர் என்.தம்பிராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று பிரசாரக் குழுவினரை வரவேற்றுப் பேசினர்.