புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தலைமலைக்கு சிறப்புப் பேருந்து சேவையை சேந்தமங்கலம் எம்எல்ஏ சி. சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே தலைமலையில் சஞ்சீவிராய பெருமாள் கோயில் உள்ளது. புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலை அடிவாரமான வடவத்தூரிலிருந்து சஞ்சீவிபுரத்துக்குப் போதிய போக்குவரத்து வசதியின்றி பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து இம் மாதத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறப்புப் பேருந்து இயக்க வேண்டும் என சேந்தமங்கலம் எம்எல்ஏ சி. சந்திரசேகரனிடம் தலைமலை சேவை அறக்கட்டளை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பரிந்துரையின்பேரில் எருமப்பட்டியிலிருந்து வடவத்தூர் சஞ்சீவிபுரத்துக்கு சிறப்புப் பேருந்து இயக்க போக்குவரத்துத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடக்க விழா எருமப்பட்டியில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. சிறப்புப் பேருந்தை எம்எல்ஏ சி. சந்திரசேகரன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இதில் ஒன்றியச் செயலர்கள் ஜெகதீசன், வரதராஜன், பேரூர் செயலர் பாலு, அறக்கட்டளை அறங்காவலர் ராஜேஷ், பொருளாளர் கர்ணன், நிர்வாகிகள் நடேசன், கார்த்திக், ராஜா, தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.