தேவனாங்குறிச்சி பகுதியில் காவல் அதிகாரி என்று கூறி பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியைச் சேர்ந்தவர் விஜயகோபால் மனைவி பிரேமா (32). இவரது வீட்டுக்கு சனிக்கிழமை வந்த ஒருவர், தான் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருப்பதாகவும், தனது நண்பருக்குத் தர வேண்டிய கடனை உடனே திருப்பித் தருவதற்கு பணம் கேட்டு மிரட்டியதாக பிரேமா ஊரக காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் காவல் அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர், திருச்செங்கோடு கோம்பை நகரைச் சேர்ந்த ரத்தினம் (44) என்பதும், பெயிண்டிங் காண்டிராக்டராக இருப்பதும் தெரியவந்தது. தனது நண்பர் கொடுத்த கடனை வாங்கவே எஸ்.ஐ. என்று கூறியதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரத்தினத்தை கைது செய்து திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைத்தனர்.