அரசுப் பள்ளிக் கட்டடம் சேதமடைந்திருப்பதால் மாணவர்கள் கடந்த 3 மாதங்களாக மரத்தடியில் அமர்ந்து படித்து வருவதாகவும், இதனால் சேதமடைந்த கட்டடத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் மலையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த 1975-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தப் பள்ளியில் நிகழாண்டில் 284 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாததால் அருகில் உள்ள கோயில், மரத்தடி நிழலில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த மே மாதம் வீசிய பலத்த காற்றால் பள்ளி அருகில் இருந்த வேப்ப மரம் கட்டடத்தின் மேற்கூரையில் விழுந்ததில் கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. ஏற்கெனவே போதிய இடம் இல்லாத நிலையில், கட்டடம் சேதமடைந்துள்ளதால் இப்போது இட நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
அமர்ந்து படிக்கும் வகையில், பள்ளிச்சூழல் இல்லாததால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிப்படைவதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து இப் பள்ளி மாணவர்களின் பெற்றோர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். இந்த மனுவை கல்வித்துறை அதிகாரிகளிடம் அளித்த ஆட்சியர் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.