நாமக்கல்லில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வுப் பேரணியை காவல் உதவி ஆய்வாளர் விஜயராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
எரிவாயு உருளைகளைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவியர் ஏந்தி சென்றனர். இப்பேரணியானது மோகனூர் சாலை, பரமத்தி சாலை, பூங்கா சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை வழியாகச் சென்று துறையூர் சாலை நகராட்சி திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் துணைப் பொது மேலாளர் அன்புச் செழியன், எரிவாயு ஏஜென்சீஸ் உரிமையாளர் பிரபு, ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.