காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் தற்கொலை படையினரின் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பல்வேறு அமைப்பினர் சார்பில் ராசிபுரத்தில் சனிக்கிழமை மௌன ஊர்வலம் நடைபெற்றது.
ராசிபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம், ராசிபுரம் ஆபரண வியாபாரிகள் சங்கம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் ஜேசிஐ மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நடந்த இந்த மௌன ஊர்வலம் முன்னதாக ராசிபுரம் ஷராப் வியாபாரிகள் சங்கம் முன் துவங்கியது. உயிரிழந்த வீரர்களின் திரு உருவப்படத்துடன், மெழுகுவர்த்தி ஏந்தியவாறு, கடைவீதி, ஆத்தூர் சாலை, கச்சேரி வீதி, பழைய பஸ் நிலையம், கவரைத்தெரு வழியாக மீண்டும் கடை வீதியைச் சென்றடைந்தது. பின்னர் வீரர்கள் திருஉருவ படத்துக்கு மலர்தூவி, மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்த மௌன ஊர்வலத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பாலாஜி, செயலர் மன்னார்சாமி, ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் ஜெ.ஜெயப்பிரகாஷ், செயலர் ஆர்.ஹரிகிருஷ்ணன், ரோட்டரி சங்கத் தலைவர் எல்.சிவக்குமார், செயலர் எஸ்.முரளி, நிர்வாகிகள் கே.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, என்.பாலசுப்பிரமணியம், எஸ்.பிரகாஷ், எஸ்.குணசேகரன், ஆர்.ரவி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
பரமத்தி வேலூரில்...
பரமத்தி வேலூரில் இந்து முன்னணி மற்றும் வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்கத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதி தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
ஜம்மு-காஷ்மீரில் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி சார்பில் பரமத்தி வேலூர் நான்கு சாலையில் மலர்தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர், நாட்டின் பாதுகாப்பு குறித்தும், பயங்கரவாதிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், ராணுவ வீரர்கள் தியாகம் குறித்தும் நினைவு கூர்ந்தும் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கோபிநாத் பேசினர். இதேபோல், வேலூர் நகர் அனைத்து வர்த்தக சங்கத்தினர் அச் சங்கத்தின் தலைவர் சுந்தரம் தலைமையில் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மொன அஞ்சலி செலுத்தினர்.