பள்ளிக் கல்வி 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்று வரும் மாணாக்கர்களுக்கு நீதி போதனை, சட்ட அறிவு, லஞ்ச ஊழல், போக்குவரத்து விதிமுறை சின்னங்கள் போன்றவற்றை பாடமாக கொண்டுவர வேண்டும் என சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் மாநிலச் செயலர் க.சிதம்பரம் அனுப்பியுள்ள மனு விவரம்:
ஒருவர் தவறான முறையில் நடந்து கொண்டால் எந்தவிதமான சட்டங்களைக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுருக்கமான முறையில் மாணாக்கர்களுக்கு பள்ளிக் கல்வி முதல் குறிப்பாக 6-ம் வகுப்பிலிருந்து பாடங்கள் கொண்டு வரப்படல் வேண்டும். சுதந்திரப் போராட்ட வரலாற்றினை பள்ளி மாணக்கர்கள் அறிந்திருப்பது மிகவும் அவசியம். தேசப்பிதா காந்திஜி, நேதாஜி, காமராஜர் போன்ற இன்னும் எண்ணற்ற தேசத் தலைவர்களை மாணவர்கள் அறியும் வண்ணம் பாடப் புத்தகத்தின் வாயிலாக கொண்டு வர வேண்டும். லஞ்சம், ஊழல் அதிகரித்து வருகிறது. படித்தவர்களால்தான் லஞ்சமும் ஊழலும் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் மொத்த மக்கள்தொகையில் 10 சதம் மட்டும் தான் அரசு ஊழியர்கள், ஆட்சியாளர்கள். அவர்களால்தான் லஞ்சம் அதிகரித்து வருகிறது என்ற நிலையில், வரும் தலைமுறை மாணவர்கள் இதனை அறிந்து, ஊழலற்ற இந்தியாவை படைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனில், இது குறித்து பாடத் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். சாலை விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடதிட்டம் மூலம் சொல்லித் தர வேண்டும். மேலும் சாலைப் போக்குவரத்தில் இருசக்கர வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து சின்னங்களை அறியாமலும், தெரிந்து கொள்ளாமல் இருப்பதாலும் விபத்து, இறப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. நீதிபோதனை வகுப்புகள் அவசியம். மாணவர்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டோடு இருப்பதற்கு ஆசிரியர்கள் வழிகாட்ட தயாராக இருக்கும் நிலையில், அதனை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் விரும்பும் மொழிகளைக் கற்றுத் தருவது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.