பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் ஆர்.வி.விஸ்வநாதன், பொருளாளர் கே.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் குழந்தான் தொடக்கி வைத்தார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் மணிவேல் வாழ்த்தி பேசினார்.
இதில், உடலுழைப்புக்குள்பட்ட 14 நல வாரியங்களுக்கு நாமக்கல் மாவட்டத்துக்கென ரூ.7 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். 4,500 ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய ஆணையை வழங்க வேண்டும். ஓராண்டுக்கும் மேலாக கட்டுமான நலவாரியத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள விபத்து, இயற்கை மரணம், திருமணம் போன்ற உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
உடலுழைப்பு தொழிலாளர்களுக்கான 10 மாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்துக்கு நிரந்தர துணை ஆணையர் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.