தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு துணைத் தலைவர் ராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த 2009 பிப். 19-ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் காவல் துறையினர் நுழைந்து வழக்குரைஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் மீது கடுமையான தாக்குதல்
நடத்தினர்.
இதையடுத்து, ஒவ்வோர் ஆண்டும் பிப். 19-ஆம் தேதியை வழக்குரைஞர்கள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.
இதுவரையில் தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்காததால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவைச் சேர்ந்த 70 ஆயிரம் பேர் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த உள்ளனர்.