பரமத்தி வேலூரில் மதுப்பழக்கம், போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாரயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாமக்கல் மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மதுப்பழக்கம்,போதைப்பொருள் மற்றும் சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி முன் துவங்கிய பேரணியை மாவட்ட கலால் அலுவலர் இலாஹிஷான்,பரமத்திவேலூர் வட்டாட்சியர் ருக்குமணி ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர்.
பேரணியில் மதுப்பழக்கம்,போதைப்பொருள் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும், கள்ளச்சாரயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் முழக்கங்கள் எழுப்பியும்,விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர். கல்லூரி முன் துவங்கிய பேரணி பரமத்தி வேலூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது. பேரணியில் கோட்ட கலால் அலுவலர் பிச்சமுத்து,வேலூர் காவல் துறை ஆய்வாளர் மனோகரன்,வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.