ராசிபுரம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், கணவர், மாமியார், மாமனார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் ராசிபுரத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் நடத்தினர்.
பிலிப்பாகுட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் சபரீஸ்வரனுக்கும், தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரிக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பொங்கலுக்கு தாய் வீட்டுக்கு போகவேண்டும் என பரமேஸ்வரி கேட்டாராம். இதற்கு கணவன் உள்பட வீட்டில் அனைவரும் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், பரமேஸ்வரி குருணை மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வரதட்சணைக்காக பரமேஸ்வரி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, ராசிபுரம் டிஎஸ்பி ஆர்.விஜயராகவன் உள்ளிட்ட போலீஸார் அங்கு வந்து சமரசம் பேசி, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.