தமிழ்நாடு அரசுப் பணியாளர்களில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வழங்கப்பட்ட 3 சதவீத பதவி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி அலுவலர் நலச் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் எஸ்.சி, எஸ்.டி பணியாளர்கள் நலச் சங்க நிர்வாகிகள் அறிவிப்புக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி அலுவலர் நலச் சங்க மாநில பொதுச் செயலர் கே.பி.ஜி.திலகர் தலைமை வகித்தார். தலைவர் எம்.பி.முத்தாரப்பன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜெயரத்தினகாந்தி, பி.பாஸ்கரன், ஜி.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாமக்கல் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்களில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வழங்கப்பட்ட 3 சதவீதப் பதவி உயர்வை அமல்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் நிலையில், டாஸ்மாக் பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.
பணியின் போது உயிரிழக்கும் டாஸ்மாக் பணியாளரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் கழிப்பறை வசதியுடன் சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனைத் தொகையை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.