பரமத்தி வேலூரில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு கபாடி போட்டி மற்றும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின்படி, பரமத்தி வேலூரில் போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபாடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான கபாடி போட்டியில் மணப்பள்ளியைச் சேர்ந்த அலைகடல் அணி முதல் பரிசையும், நாமக்கல் போலீஸ் அணி இரண்டாம் பரிசையும், பரமத்தி வேலூர் ராக்கர்ஸ் அணி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
பெண்களுக்கான கபாடிப் போட்டியில் கீரம்பூர் கொங்கு பள்ளி அணி முதல் பரிசையும், ஜோடர்பாளையம் அருகே உள்ள வடுகபாளையம் அரசு பள்ளி மாணவிகள் இரண்டாம் பரிசையும் பெற்றனர். கபாடி போட்டி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 14-ஆம் தேதி பரமத்தி வேலூர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், வேலூர் காவல் துறை ஆய்வாளர் மனோகரன் வரவேற்றுப் பேசினார்.
நாமக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமணகுமார் முன்னிலை வகித்தார். பரமத்தி வேலூர் காவல் துறை கண்காணிப்பாளர் ராஜூ வெற்றிபெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை வாழ்த்திப் பேசினார்.
நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பைகள் மற்றும் பரிசுப் பொருள்களை வழங்கிப் பேசினார். முடிவில், பரமத்தி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
விழாவில், பரமத்தி வேலூர் உள்கோட்டத்துக்கு உள்பட்ட உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.