நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தேர்தல் செலவினங்களைப் பார்வையிட, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரு பார்வையாளர்கள் வெள்ளிக்கிழமை (22--ஆம் தேதி) வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை, ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் வரை செலவிடலாம் என தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. அதை மீறி செலவு செய்து, அது பார்வையாளர்கள் மூலம் கண்டறியப்பட்டு, உறுதியானால் வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவர் பதவியேற்க முடியாத சூழலுக்குத் தள்ளப்படுவார்.
தேர்தல் மனுத் தாக்கல் முதல், வேட்பாளர் செல்லும் பிரசாரம், சுவர் விளம்பரங்கள், பேனர், போஸ்டர்கள், தலைவர்கள் வருகை, பொதுக்கூட்டம், தொண்டர்களுக்கான செலவினம், உடன் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை பார்வையாளர்கள் விடியோ பதிவு செய்து அவற்றை கணக்கிடுவர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான செலவினப் பார்வையாளர்களாக, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மாயூர் காம்ப்ளே, கேரளத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வெள்ளிக்கிழமை நாமக்கல் வருகின்றனர். சேந்தமங்கலம், ராசிபுரம், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிகளைப் பார்வையாளர் மயூர் காம்ப்ளேவும், திருச்செங்கோடு, சங்ககிரி, பரமத்திவேலூர் தொகுதிகளை பார்வையாளர் ராஜேஷூம் கண்காணிக்க
உள்ளனர்.
வேட்பாளர்களும், வாக்காளர்களும் தேர்தல் செலவின விதிமீறல் தொடர்பாக இவர்களிடம் புகார் தெரிவிக்கலாம். அவர்களது செல்லிடப்பேசி எண்கள் விரைவில் வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பார்வையாளர்கள் தவிர, பொதுப் பார்வையாளர் ஒருவரும், சட்டம், ஒழுங்கு பிரச்னையை பார்வையிடுவதற்கான பார்வையாளர் ஒருவரும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட இருக்கின்றனர். அவர்கள் அடுத்த வாரம் நாமக்கல் தொகுதிக்கு வரலாம் என்ற தகவல்
வெளியாகியுள்ளது.