பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவமானது தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு முதலில் புகாரளித்த பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணியிடை நீக்கம் செய்யவும், இவ் வழக்கில் முதல் குற்றவாளியாக அவரைச் சேர்க்கவும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பணிப் புறக்கணிப்பில் பங்கேற்றதாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்க கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் பி.ராமலிங்கம் தெரிவித்தார்.