நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, அரசு மகளிர் கல்லூரி மாணவியரிடம் புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில், 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், நாமக்கல் தொகுதிக்கான உதவி தேர்தல் அலுவலராக சார்-ஆட்சியர் சு.கிராந்திகுமார் பதி உள்ளார். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். செவ்வாய்க்கிழமை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம், வாக்குப்பதிவு செய்வதைத் தவற விடமாட்டோம் என கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
அதேபோல், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர்களிடம், சார்-ஆட்சியர் சு.கிராந்திகுமார்பதி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். குடும்பத்தில் வாக்குப்பதிவுக்கு தகுதியானவர்களிடம் இக்கருத்தை எடுத்துரைக்க வேண்டும். அதற்கு சாட்சியாக அனைவரும் தங்களது கைரேகையைப் பதிவு செய்து உறுதியளிக்க வேண்டும் என்றார். அதன்பின், மாணவியர் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான பேனரில் கைகளை பதிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் பிரிவு அதிகாரிகளும், கல்லூரிப் பேராசிரியர்களும்
செய்திருந்தனர்.
திருச்செங்கோட்டில்
கையெழுத்து இயக்கம்...
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்செங்கோட்டில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ்
முதல் கையெழுத்திட்டு தொடக்கி வைத்தார். இதனையடுத்து வருவாய்த்துறை ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கையெழுத்திட்டு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். வாக்குப் பதிவு வரை பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இது போன்று நடத்தப்படும் என வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ் தெரிவித்தார்.