பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், பொள்ளாட்சி வன்கொடுமை சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து பேசினார். இதில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், ஆபாச இணையதளங்களை தடைசெய்ய வேண்டும், கட்செவிஅஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் உள்ளிட்ட செயலிகளை தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்து முன்னணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொத்தனூர் நகர பொறுப்பாளர் மணிராஜ் நன்றி கூறினார். மேலும் மக்களவைத் தேர்தல் அறிவித்த பின்னர் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மீது பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.